Friday, December 4, 2020

"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான்.


“எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்”


🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும் சீர்குலைக்காதவாறு உறுதியாக இருப்பேன்.


🔮நான் சந்திக்கும் ஒவ்வொரு  நபரிடமும்  மகிழ்ச்சி, செழிப்பு, உடல்நலம் பற்றி பேசுவேன்.


🔮 நான் சந்திக்கும் ஒவ்வொரு  நபரிடமும்  அவர்களுக்குள்  இருக்கும் சக்தியை உணரச் செய்வேன்.


🔮ஒவ்வொரு விஷயத்திலும் இருக்கும் நல்லவற்றை மட்டும் பார்த்து எனது நம்பிக்கையை மெருகேற்றி கொள்வேன்.


🔮சிறந்ததை மட்டுமே எண்ணுவேன், சிறந்ததை மட்டுமே 

செய்வேன்,சிறந்ததை மட்டுமே எதிர்பார்ப்பேன்.


🔮 மற்றவர்களின் சந்தோசத்தை எனது சந்தோசமாக  எண்ணி பூரிப்படைவேன் .


🔮கடந்த கால தவறுகளை மறந்து, எதிர்காலத்தில் நான் அடையப் போகும் பெருமைகளை எண்ணி வீறுநடை போடுவேன்.


🔮 நான் எப்போதும் மகிழ்ச்சியை மட்டுமே எண்ணுவேன்                        மற்றும்   நான் சந்திக்கும் ஒவ்வோர் உயிரிடமும் புன்சிரிப்பை காட்டுவேன்.


🔮 பிறரை குறை சொல்ல நேரமே இல்லாத வகையில் என்னை

மெருகேற்றி உயர்த்தி கொள்ள பெரும் நேரம்  செலவிடுவேன்.


🔮 சோகத்தில் அமைதியாகவும், கோவத்தில் தன்மையாகவும், பயத்தில் உறுதியாகவும்,  தொல்லைகள் வரும் பொழுதும் மனம் முழுதும் மகிழ்ச்சியை பரவிட செய்வேன்.


🔮 என்னுடைய  நலனில் முழு கவனம் செலுத்தி அதை சொல்லால்அல்லாமல் செயலால் இந்த உலகிற்கு பேரறிவிப்பு  செய்திடுவேன்.


🔮என்னுடைய மனசாட்சியின் பால் நேர்மையாக இருப்பேன்,இதனால் இந்த பிரபஞ்சமே எனக்கு துணையாய்  நிற்கும் .


                                                                                     ஆக்கம் - கிறிஸ்டின் டி  லார்சன் 

                                                                                      தமிழில் - முத்தழகன் இ 

(இந்த கட்டளைகளை தினந்தினம் காலை பிரகடனம் செய்யுங்கள். மேலும் அறிந்து கொள்ள ரோண்டா ப்யர்னே எழுதிய "ரகசியம்" புத்தகத்தை வாசிக்கவும்  )


❣️❣️❣️

“அன்பை பெற வேண்டுமா...

உங்களை அன்பால் மூழ்கடித்து கொள்ளுங்கள்,

 நீங்கள் ஒரு காந்தமாக மாறும் வரை”

❣️❣️❣️

Saturday, October 17, 2020

"வெற்றியின் மந்திரம்"


வாழ்க்கைக்கான
 அர்த்தம் தேடிடும்,
 அற்புத பயணத்தில்,
 இன்று ஓர்
 புதிய அத்தியாயம்
 எழுத தொடங்கு,
 
நேற்றும் இன்றும்
வேறல்ல.
அதே வானம்,
அதே விண்மீன்.
பயணம் ஒன்றுதான்,
இலக்கு ஒன்றுதான்,
திசை ஒன்றுதான்,
ஆனால், பாதைகள் வெவ்வேறு.
செல்லும் வழியில்,
சுழல்,சூழல் கண்டறி.
நம்பிக்கையோடு நடைபோடு.
நடக்கும் தூரம்
நமக்குப் பாடம்.

புத்தகத்தின் பக்கங்கள் 
தாண்டி, இந்த உலகம்
மிக பெரிது. 
தீயென விடு.
நல்லன நாடு,
புதியன கல்.
விரும்பியன செய்.
காலம் உனக்கு 
சகலமும் போதிக்கும்.

உந்துதல் இல்லா
முன்னேற்றம் உண்டோ.
போதனைகள் யாவும்
போதாது இவ்வுலகில்,
களம் கண்டு போராடு
வெற்றியோ தோல்வியோ
வீரமுடன் போராடு.
வென்றால் மகிழ்வோம்
வீழ்ந்தால் எழுவோம்.

நீரின் ஓட்டத்தில்
திரும்பி விடாதே,
உனக்கான திசையில்
எதிர்நீச்சல் போட்டிடு.
தண்ணீரில் கண்ணீரை
கரைத்து விடு,
கரை தொடும் நேரம்
வெற்றி உன் கால் தொடும்.

கண்ணீர் துளிகள்
வழிந்திடும் கன்னத்தில்
வியர்வை துளிகள் 
வழிகிறதா...
நீ வெற்றிக்கான 
பாதையில் பயணிக்க 
தொடங்கி விட்டாய் 
என அர்த்தம் கொள்.


வாழ்த்துக்களுடன்,
இ. முத்தழகன்

Sunday, July 5, 2020

"தமிழும் துளிரும்"

நன்சொல் உரைப்பினும்
நன்முறை காட்டினும்
நானிலத்தில் யாவர்க்கும்
கேட்டிட நேரமில்லை,
சொல்லும் அருகதை
உணக்குண்டோ வென
வினவிடவே முன்னிற்க
எரியும் நெருப்பது
தொட்டால் சுடுமென
சொல்லியும் கேளா
தொட்டுப் பார்த்தபின்
சுட்டதென துடிப்பதென்
மானுட அறிவோ?

நாகரிக வளர்ச்சியில்
தான் நம்மை நாமே
தொலைப்பதென்ன?
தொண்குடி பிறந்திட்டும்
தொக்கிட்டு நிற்பதென்ன?

சேர சோழ பாண்டியரும்
சேரவிங்கு அரசாண்டு,
தன்மக்கள் தான்சிறக்க
தணியாத தாகத்தில்
போர்க்களம் புகுந்து
எதிர்ப்படும் எதிரியை
வெட்டி வீழ்த்திட,
வீரம் சொரிந்துடும் 
ஒவ்வொரு அணுக்களும்
வீணாய் போனதென்ன?

வாணிபம் செய்திட
வந்திறங்கிய அண்ணியரை
வாசலோடு அனுப்பிடாது,
உபசரிக்கும் தன் குணத்தை
உபரியாக காட்டிட,
உப்பிட்ட வீட்டினில்,
உதவிட்ட நாட்டினில்,
நரித்தனம் காட்டி,
நாட்டை அடிமையாக்கி அரசாள,
நூற்றாண்டுகள் பலகடந்து
அகிம்சா கடைபிடித்து,
பெற்ற சுதந்திரம் தனை
காற்றில் பறக்கவிட்டு
கைகட்டி நிற்ப தென்ன ? 

ஆரியணவன் வந்ததினால்
ஆத்ம வேதமது ஓதியதால்,
ஆச்சரியப்பட்டு நின்றதனால்,
ஒன்றாய் நின்ற தமிழன் தனை,
நால்வர்ணம் தனை புகுத்தி,
குலம்,கோத்திரம் என 
தன்னை உயர்வாக்கி,
தமிழனை தறியாக்கி,
நெய்தவனை தோலுரித்து,
சட்டைக்கும் செருப்பிர்க்கும்
சாதியை சாக்குகாட்டி
சாதிக்க பிறந்தவனை
சூத்திரனென சுட்டிக்காட்டி
இன்றளவும் அடக்கி 
ஆண்டுகொண்டு இருப்பவனை
கைகட்டி வேடிக்கை பார்பதென்ன?

மேற்கே அண்ணியனும்
வடக்கே ஆரியனும்
வந்தது போதாதென,
இல்லாத திராவிடத்தை,
இருப்பதென பொய்யுறைத்து,
அரியணை ஆசையில்
நாத்திகன் என தானுரைத்து
சோசியரின் சொல்படி
மஞ்சள் துண்டும்,
மரகத கல் மோதிரமும்
அணிந்துங்கு ஆட்சி செய்ய,
கொள்கை கோட்பாடெல்லாம்
காசின் முன் இடுகாடு செல்ல,
இடுகாட்டு கூரை முதல்
இடற்படும் காற்று வரை 
அத்தனையும் விற்றிங்கே
விழுங்கி நிற்கும் 
அரசியல் அயோக்கியர் களை
களை எடுக்க துணிவின்றி
தூனாய் நிற்பதேன்ன?

நெல்லும் கம்பும்
உயர்வரகும் சாமையும்
கேப்பையும் கொண்டு
உறுதியாய் இருந்தகாலம்
கணவாகிப் போனதேனோ?
பீசாவும், பர்க்கரும்
காற்றடைத்த பண்டங்களும்
நாவின் சுவை தீர்க்க,
ஆயுளின் காலமது
ஆவியாய் போவதை 
உணரத் தான் மறுப்பதென்ன?

ஈராயிரம் ஆண்டுகளாய்
எவ்விதமும் குன்றாது
அழகுத் தமிழின்
ஆழமது புரியாது,
அடிமை கொண்டவனின்
ஆளுமை பெரிதென
அவன் மொழியினை 
கொண்டாடி களிப்பதென்ன?

கேளாய் தமிழா,
நான் இயம்புவதை விடினும்,
நீ கேள்வியுற்றதை விடிணும் உன்
பாரம்பரியமும், பண்பாடும்,
நீண்டது, மிக நெடியது.
தலைமுறை பல கடந்து
தழைத்தோங்கும் நம் மரபை,
துளிர்க்கும் தளிராக,
மனதில் நட்டுவிடு,
ஒருநாள் பூவாய் மலர்ந்திடும்,
நம்பிக்கையோடு காத்திரு!!!

Saturday, April 4, 2020

3 மாத தவணை ஒத்திவைப்பு - நன்மையா ? தீமையா?

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் 3 மாதத் தவணை ஒத்திவைப்பு. நன்மையா ? தீமையா?
உலகம் முழுவதும் கொரோனா பரவிவரும் இச்சூழ்நிலையில், நாட்டின் பொருளாதாரம் மிகவும் தடுமாறி வருகிறது. சாமானியர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் மாதத் தவணைகள் என்னும் பெரும் சுமையை குறைப்பதற்காக அரசு பல நலத்திட்டங்களை அறிவித்து உள்ளது.வருவாய் இழப்பு மற்றும் சம்பளங்கள் வராமல் இருத்தல், தொழில்கள் முடங்கி போதல் போன்ற காரணிகளால் பணம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த காலத்தில் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவுப்புகள் இன்றியமையாததாகின்றது.


கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி, ரிசர்வ் வங்கியின் முதற்கட்ட அறிவிப்பின்படி பல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தனித்தனியாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாதத் தவணை விடுப்பு வழிமுறையை வழங்கி வருகின்றன. இது ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடுவதாகும். கீழே குறிப்பிட்டுள்ள தரவின் படி கடன் பெற்றோர் தங்களுக்கான மாதத் தவணை ஒத்திவைப்பு அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். என்றாலும் கூட இந்த அறிவிப்பு தங்களுக்கு சாதகமாக அல்லது பாதகமாக என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். இந்த மூன்று மாத ஒத்திவைப்பு காலத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி தொகையானது உங்கள் அசலில் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது மிகவும் முக்கியமான தகவலாகும். இப்போது நீங்கள் இரண்டு அல்லது மூன்று மாதம் உங்கள் மாத தவணையை ஒத்தி வைத்தால் உங்களது கடனை திருப்பி செலுத்த வேண்டிய காலம் 1 முதல் 1.5 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட லாம்.



இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி(SBI) 31 மார்ச்2020 அன்று ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளது. அதில்,
"ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி எஸ்பிஐ வங்கியானது 01/03/2020 முதல் 31/05/2020 வரை வசூலிக்கப்பட உள்ள மாதத் தவணைகளை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கிறது. அதே போல் 01/03/2020 முதல் 31/05/2020 வரையிலான நடைமுறை முதலீட்டின் வட்டியையும் 30/06/2020 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது "என தெரிவித்துள்ளது.


இந்த மூன்று மாத காலத்திற்கு தவனை செலுத்துவது மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதே தவிர, அதற்கான வட்டி கணக்கீடு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இந்த மூன்று மாதங்களுக்குப் பின்பு நாம் செலுத்த வேண்டிய வட்டி தொகையானது நமது வாங்கிய அசல் உடன் சேர்க்கப்படும். இதனால், ஒன்று நாம் இனிவரும் காலங்களில் செலுத்த வேண்டிய மாத தவணைகள் அதிகமாகும் அல்லது கடன் பெற்றோர் அதனை செலுத்தும் மாதத் தவணைகள் நீட்டிக்கப்படும்.




சில வங்கிகள் வெளியிட்டுள்ள மாதத் தவணை ஒத்திவைப்பு விபரங்களை இங்கு காணலாம் :

ஐசிஐசிஐ வங்கி :
( ICICI Bank )


இவ்வங்கியானது தனது கடன்களை இரண்டு வகையாகப் பிரித்துள்ளது.

"A வகை கடன்கள்"
இவை தானியங்கியாக மாதத் தவணை ஒத்திவைப்பு தேர்வு செய்யும். அதிலிருந்து வெளியேற வேண்டுமானால் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.

"B" வகை கடன்கள்
இவ்வாறு இந்த வகையில் தானியங்கியாக மாதத் தவணை ஒத்திவைப்பு நேராது. நாம் ஒத்திவைப்பு வேண்டுமானால் கீழ் உள்ள வழிமுறையை பின்பற்ற வேண்டும்.
இணையதள முகவரி :
https://www.icicibank.com/managed-assets/docs/personal/COVID-regulatory-package-FAQs.pdf

எச்டிஎஃப்சி வங்கி
(HDFC Bank)
உங்களுக்கு மாதத் தவணை ஒத்திவைப்பு வேண்டாம் என்று நினைத்தால் நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்யத் தேவையில்லை.உங்களுக்கு ஒருவேளை மாதத் தவணை ஒத்திவைப்பு வேண்டுமானால் நீங்கள் கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி அதை செயல்படுத்திக் கொள்ளலாம்.

இணையதள முகவரி :
https://www.hdfcbank.com/personal/pay/payment-solutions/loan-repayment



கோடக் மஹிந்திரா வங்கி
(Kotak Mahindra Bank)


மாதத் தவணை ஒத்தி வைப்பு திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் வங்கிக்கு ஒரு ஈமெயில் கடிதம் எழுத வேண்டும். இந்த ஒத்திவைப்பு காலத்தில் வட்டி வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு முகவரி : 
https://www.kotak.com

ஐடிபிஐ வங்கி
(IDBI Bank )

இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மாதத் தவணை ஒத்திவைப்பு இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள அவர்கள் moratorium@idbi.co.in என்ற முகவரிக்கு ஏப்ரல் 15 2020 க்குள் இமெயில் அனுப்ப வேண்டும்.

இணைப்பு முகவரி :
https://www.idbibank.in/faq-covid-installment.asp


இந்த தவணை ஒத்திவைப்பு கீழ்கண்ட எடுத்துக்காட்டின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம் :

உதாரணமாக நீங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையானது ஒரு லட்சமும் (RS.1,00,000) அதற்கான வட்டி 12 சதவீதமாக இருக்கும் போது, நீங்கள் மாத மாதம் செலுத்த வேண்டிய வட்டி ₹1000 ரூபாய். இப்பொழுது நீங்கள் 3மாதம் மாதத்தவணை ஒத்திவைப்பு முடிவை எடுத்தால், நீங்கள் மூன்று மாதம் கழித்து நீங்கள் ₹3030.10 ரூபாய் வட்டியாக கட்ட வேண்டி வரும்.


அதேபோல, இப்போது 20 லட்ச ரூபாய்க்கு ஒரு வாகனம் வாங்கியிருந்தால் ஐந்து வருடத்திற்கு 9.5 சதவீத வட்டி என்று இருந்தால் நீங்கள் மூன்று மாதத்திற்கான வட்டியாக கூடுதலாக 47 ஆயிரத்து 500 ரூபாய் கட்ட வேண்டிய வரும் (அதாவது இது 1.5 மாதத்திற்கான கூடுதல் தவணைத் தொகைக்கு ஈடான தொகையாகும்)





எந்தன் ஆலோசனை யாதனின் :

உங்கள் பணம் வருவாய்க்கான தடை இருந்தாலோ அல்லது உங்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருந்தாலோ, நீங்கள் ரிசர்வ் வங்கியின் இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம். இருந்தாலும் நீங்கள் செலுத்தவேண்டிய மாத தவணைக்கான வட்டி, இப்போது செலுத்தாமல் இருந்தாலும்கூட, அது 3 மாதங்களுக்கு பின்னர் உங்கள் அசலில் சேர்ந்து தவணையின் மதிப்பை அதிகப்படுத்தும் என்பதனை நாம் இவ்விடத்தில் நினைவு கொள்ளுதல் அவசியமாகிறது. உங்களால் இந்தப் பொருளாதார இக்கட்டை சமாளிக்க முடியும் என்றால், நீங்கள் எப்பொழுதும் போல் உங்கள் மாத தவணையை செலுத்தி வரலாம், ஒருவேளை உங்களால் இந்த சூழ்நிலையை கையாளும் முடியாவிட்டால் நீங்கள் மாத தவணை ஒத்திவைப்பு நடவடிக்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இத்தேர்வின் மூலம் உங்களின் கடன் சுமையும் நீங்கள் செலுத்த வேண்டிய காலமும் நீக்கப்படலாம் என்பதனையும், அது எதிர்காலத்தில் தங்களுக்கு மேலும் ஒரு சுமைதான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நன்றி.



(இந்த தரவு பயனுள்ளதாக இருந்தால் மற்றோர்க்கும் பகிர்ந்து உதவவும்)

Monday, March 30, 2020

"அன்பே கொரோனா"

வருக! வருக!
உகானில் தொடங்கி
எம்மவர் மோடி போல்
உலகம் சுற்றிப் பார்க்க
உற்சாகமாய் வரும்
அன்புக் கொரோனா - வே
வலது கால் வைத்து
வந்துவிடு நாட்டிற்குள்...

வந்தாரை வரவேற்று
விருந்தோம்பல் புரிவதில்
எம்தமிழ் குடிகளுக்கு யாரும்
 நிகருன்டோ இவ்வுலகில் - இக்
கவிதனை காண்கின்ற
 கண்கள் யாதொன்றும்
ஆச்சரியத்தால் விரிவதில்
 ஆச்சரியமில்லை எமக்கு.

உலகமே உன்னை
 "தூற்றிக்" கொண்டிருக்க,
 இருகரம் கூப்பி நின்புகழை
 "போற்றிக்" துதிபாடி
 வரவேற்பது நானே நானாக 
 மட்டும்தான் இருக்கும்.

அறிவியலை கேட்டால் 
உன்னை "கிருமி" என்னும்.
அழகனை  கேட்டால்
உன்னை "கருமி" என்பேன்.
ஆம், பைசா செலவில்லாமல்
 பழக்க வழக்கம் 
பலவற்றை பக்குவமாய்
சொல்லித் தருகின்றாயே...

ஐந்து  அங்குல
இடைவெளியில் அடுக்கடுக்காய்
தொங்கும் கைப்பிடியை,
கைப்பிடிக்க கைகள் பத்து
போட்டி போட, 
தன் மூச்சு காற்றை
தானே சுவாசிக்கும், - இந்த
கான்கிரீட் காடுகள் வாழ்,
கார்ப்பரேட் பிரஜைகள்
 யாவும் தினம்தினம் 
ரயிலில் பயணிக்க,
யாருக்கும் சொல்லாமல்,
உன்னைப்போலவே
அனுதினமும் அனைவருக்கும் 
வந்துவிடும்  தும்மல் தனை,
எதிர்,புறம், மேல், கீழ் 
சுற்றம் முற்றம் என
என எத்திசையும் பாராமல்
எச்சிலை அள்ளித் 
தும்மித்  தொலைக்கும்
அறிவிலி ஜீவன்களுக்கு
கைக்குட்டை பயன்படுத்த
அழகாய் சொல்லித்தந்தாய்...


தலைசாயும் செங்கதிரை
தலையோடு கோதுவதாய்
தினந்தோறும் தான் எண்ணி
போகையிலும் வருகையிலும்
கிருமிகள் யாவும்
சகல சௌபாக்யத்தோடு 
குடித்தனம் நடத்தும் 
சுற்றுச்  சுவற்றை எல்லாம்
அனுபவித்து தடவி வந்து,
கை ஏதும் கழுவாமல்
நாயர் கடைதன்னில்
நாள்பட்ட எண்ணெயில்
தற்கொலை செய்துகொண்ட
பஜ்ஜியை எடுத்து தின்னும்
அருஞ் சுவை மன்னர்களை
சோப்புத் தண்ணீரில்
கைகழுவ செய்தாய்....!

திறந்து வைத்த நாள் முதல்
தண்ணீரை கூட
கண்டிராமல் காய்ந்திருக்கும்
அரசு மருத்துவமனைகளின்
 தரைகளை யாவும்
கிருமி நாசினி கொண்டு 
கழுவச் செய்து,
உன் சொந்த பந்தங்களான
ஏனைய வைரஸ்களை
பூவுலகம் அனுப்பி வைத்தாய்...!

காலச்சக்கரத்தின்,
ஆயுள் கைதிகளாய்,
அடைபட்டு கிடந்த
மண்ணுலக மனிதர்களுக்கு
21 நாட்கள் பெயில் 
கொடுக்கச் செய்து
ஞாயிற்றின் காலையும்
திங்களின் காலையும்
வேறுவேறு அல்லவென
உணர்த்திச் சென்றாய்...

வஞ்சம்  சூழ்ச்சி,
பொறாமை பொய்
போட்டி பேராசை
சண்டை சச்சரவு
சபலம் சுயநலம்
மதம் சாதி
குலம் கோத்திரம் 
உயர்ச்சி தாழ்ச்சி வென
ஆயிரம் கொரோனாக்களை
தன்னகத்தே கொண்டுள்ள
அற்ப மனிதனுக்கு 
"மனிதத்தின்" மகத்துவத்தை
அழகாய் புரியவைத்தாய்...!

ஒழுக்கத்தின் விழுப்பம் தனை
ஒழுங்காய் கற்றிடாமல்
வள்ளுவனின் வாக்குதனை
வகுப்போடு மறந்துவிட்டு 
வாட்ஸ் அப்பிலும் பேஸ்புக் கிலும்
வந்திந்திகளை பரப்பி வருகிறோம்
வீழாமல் என்றென்றும்
விழிப்புற மாட்டோம் என
கங்கணம் கட்டிக்கொண்ட
மானுட மாக்களுக்கு
நல்லுரை வழங்கிட 
வைரசாக வந்தவும்மை
வணங்காமல் இருந்திடுவோமா
இல்லை மறந்து தான் 
கடந்திடுவோமா..?

Wednesday, March 11, 2020

"குரு தட்சணை"

'அ' வென்றும் 'ஆ' வென்றும்
சிலேட்டில் எழுதி, சொல்லி
வந்த எமக்கு பத்தாம் வகுப்பு
வந்த பின்பு தான்
'அகரம்' என்றும் 'ஆகாரம்' என்றும்
சொல்லப் பழகித் தந்தாய்...!

ஆண் உயர்வா இல்லை
பெண் உயார்வா என்று
அறியா வயதில் புரியா
சண்டை செய்த எமக்கு
ஆணும் பெண்ணும்
சமம் என்று அறிவுரை செய்தாய்..!

அர்த்தம் புரியாமல்
மேல் கணக்கும், கீழ் கணக்கும்
மனப்பாடம் செய்த எமக்கு
சுதி, தாளம், இராகம் சேர்த்து
பாடலாக வடித்துத் தந்தாய்.

வகுப்பறைகள் தோறும்
பேசுவோரே கண்காணிக்க
இருவர் இருந்த நிலையில்
ஒழுக்கத்தின் மேன்மை
சொல்லி 'லீடர்' இல்லா
வகுப்பறையாக மாற்றி
புது புரட்சி செய்தாய்...!

கோனார் உரையில்
வினா விடை மட்டுமே
படித்து மதிப்பெண்
பெற தெரிந்த எமக்கு
நாபிறழ் பயிற்சியும்,
பொது அறிவு பக்கத்தையும்
படிக்கச் செய்தாய்...!

முதன் வகுப்பே
உன் வகுப்பாய்
தான் இருக்க,
பல சிந்தனையில்
பள்ளி வரும் எமக்கு
உன் நகைச்சுவையால்
செல்லக் கடி கடித்து
அத்தனையும் மறக்கச் செய்தாய்...!

'சார்' என்றும் 'மேடம்' என்றும்
ஆங்கிலத்தில் அழைத்தே
பழகிய எம் நாவிற்கு
'ஐயா' என்று அழகிய
தமிழில் அழைக்க
பழக்கம் செய்தாய்...!

டியூஷன் வகுப்பில்
ஒன்று, கதை பேசி
கழித்திருபோம் அல்லது
வீட்டுப் பாடம் எழுதி
முடித்திருப்போம் ஆனால்,
நீ வந்தே பின்னே
கவிதையும், பாட்டும் பாடசொல்லி
எங்கள் தனித்திறமை
யாவென எங்களை
அறியச் செய்தாய்...!

தூரத்தில் ஆசிரியர்
சென்றாலே ஒளிந்து
கொண்ட நாட்களை,
விடுமுறையில் கண்டாலும்
எதிர் சென்று வணக்கம்
செய்யும் நாட்களாய்
மாற்றிய "ஆசு அரியரும்"
நீ தானே...!

பிள்ளைகளுக்குள் பேதமின்றி
பொதுவாக நடத்தும் தாய்போல,
மாணவர்களுக்கு பேதமின்றி
அனைவரையும் ஒன்றுபோல,
அன்புவழி காட்டி
தோளில் கைபோட்டு
அரவணைத்துக் கொண்ட
அன்பாசிரியர் நீ தானே...!

கற்றவையும் கற்பவையும்
மட்டுமே சொல்லித் தர
இங்கே ஆயிரமாயிரம்
ஆசிரியர் இருக்க
"நிற்க அதற்கு தக"
என சொல்லிய ஆசிரியர்
நீ மட்டுமே  என
என்றும் பெருமை
கொள்வோம் நாங்கள்...!


(எந்தன் தமிழுக்கு விதை இட்டவர். ஆசிரியர் என்னும் புனித உறவை தாண்டி எங்களிடம் அன்பு காட்டிய ஆசான் திரு. பிரபு அவர்களின் பிறந்த நாளில் இந்த மாணவனின் சிறு கவி - தட்சணை)



Saturday, March 7, 2020

"தியாகம் போற்றுதும்"


ஓடும் நதி போல,
ஓங்கும் அலை போல,
நில்லாமல் கரை தொடும்,
நிகரில்லா பெண்ணினமே,
உந்தன் தியாகமதை 
எண்ணத்தான் கணக்குண்டோ?


மலர்ந்த வீட்டின் மனம்
மறந்து, மணந்த வீட்டின்
மனம் மலர, நினைவுகளை
கடந்து நிற்பதை தான் 
தியாகம் என சொல்லலாகுமோ?


வாக்கப்பட்டு வந்த வீட்டில் - புது
வழக்கமதை கற்றிட்டு
வாசல் கோலமிட்டு,
வந்தவருக்கு வணக்கமிட்டு,
வாய்க்கு சுவை உணவிட்டு,
வாரிசை தான் சுமந்து, நாளும்
வந்தனம் தான் செய்யும்
செயலதை தான்,
தியாகம் என சொல்லலாகுமோ?


மன்னவன் முன்செல்ல
அவன்தன் முதுகெலும்பாக 
பின்னவள் நீ செல்ல,
மணவாளனை,
வாழ்த்தும் ஊரதுதான்,
உன்னை மறந்ததை,
மறந்துவிடும் தன்மையதை
தியாகம் என சொல்லலாகுமோ?


செய்யும் வேலைதான்
அச்சாய் ஒத்திருக்க,
ஆணினம் என்பதனால்
ஊதியம் அதிகம் 
கொடுத்திடும் சமூகமதை
பொருத்திருக்கும் உன் செயலை,
தியாகம் என சொல்லலாகுமோ?


அதிகாரம் தான் காட்டி,
ஆதிக்கம் தான் செலுத்தி,
இழிவாய் தான் பேசி,
ஈதை தான் தந்து,
உற்றார் முன் இகழ்ந்து,
ஊரார் முன் ஏசி,
எட்டி தான் உதைத்து,
ஏளனம் தான்  பேசி,
ஐயுரவு தான் காட்டி,
ஒடுக்குமுறை தான் நீட்டி,
ஓரம் கட்டி இழிநிலை காட்டி,
ஔவியம் கொள்ளும் ஆணினத்தை,


அன்பால் தான் திருத்தி,
ஆதரவு தான் தந்து,
இன்முகம் தான் காட்டி,
ஈடில்லா தியாகம் தந்து,
உறவின் மகிமை காட்டி,
ஊன்றுகோலாய் துணை நின்று,
எண்ணத்தால் நிமிர்ந்து,
ஏற்றத்தாழ்வு   மறந்து,
ஐந்தொழிலும் ஒருசேர
ஒன்றாய் தான் செய்து,
ஓர்மை தான்  கொண்டு,
ஔடதமாகும் பெண்ணினமே,


வாழ்த்ததனை சொல்லிவிட்டால்
வணங்குவதாய் அர்த்தமில்லை,
அனுதினமும் தொழுதும்மை,
அடினெஞ்சில் போற்றிடுவேன்,
கழியும் வருடமதில் கடக்கும்
ஒரு நாள் பொழுது உமதல்ல,
ஆணினம் சுவாசிக்கும் 
ஒவ்வோர் நொடியும் உமதே.!

Saturday, February 8, 2020

"அவள்தான் அவளேதான்"

அவள்தான்,
பாவும் மாவும் டாவும்
ஓயாமல் ஒலித்த 
எந்தன் நாவினில்
(அண்)நா, (அண்) நீ என
 புதுமொழி புகுத்தியவள்
அவள்தான்.

அவள்தான்,
பா - சொரியும் எங்கள் வீட்டினில்
புன்னகையாய் பூச் சொரிய
வந்தவளும்,
 அவள்தான்.
 
அவள்தான்,
கால்நூற்றாண்டு
காலமாய் ஆண்மகவு
அதிக்கம் புரிந்த 
எங்கள் வீட்டினை
அமைதியாய் ஆட்கொள்ள
வந்தவளும்
 அவள்தான்.
 
அவள்தான்,
மாத்திரைகள் வாசம்
புரிந்த எங்கள் வீட்டினில்
மூலிகைகளின் சுவாசம்
புரியச் செய்தவளும்
அவள்தான்.

அவள்தான்,
வேட்டி,சட்டை, சேலை
மட்டுமே கண்டு
காய்ந்து போன
எங்கள் வீட்டு கொடிகளுக்கு
சுடிதாரின் தரிசனம் தந்தவளும்
அவள்தான்.

அவள்தான்,
கண்மையும், முகப்பூச்சும்
கண்டிராத எங்கள் வீட்டு
கண்ணாடிகளுக்கு
ஃபேர் அன் லவ்லி
காட்டி கண் திறந்து வைத்தவளும்
 அவள்தான்.

அவள்தான்,
தாயும் தந்தையுமாய்
இருந்த எந்தன்
பெற்றோர்களுக்கு
தாத்தா பாட்டியாய்
பதவி உயர்வு 
அளிக்க போவதும்
 அவள்தான்.

"அவள்தான்,
அவளேதான்"
எந்தம் இல்லத்தின்
புதியதோர் 
பட்டத்து இளவரசிக்கு
எந்தன் புது தாயவளுக்கு
இந்த கவிமகனின்
மனமார்ந்த
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!
🍰🎁🎂🎈🎉

"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...