Monday, March 30, 2020

"அன்பே கொரோனா"

வருக! வருக!
உகானில் தொடங்கி
எம்மவர் மோடி போல்
உலகம் சுற்றிப் பார்க்க
உற்சாகமாய் வரும்
அன்புக் கொரோனா - வே
வலது கால் வைத்து
வந்துவிடு நாட்டிற்குள்...

வந்தாரை வரவேற்று
விருந்தோம்பல் புரிவதில்
எம்தமிழ் குடிகளுக்கு யாரும்
 நிகருன்டோ இவ்வுலகில் - இக்
கவிதனை காண்கின்ற
 கண்கள் யாதொன்றும்
ஆச்சரியத்தால் விரிவதில்
 ஆச்சரியமில்லை எமக்கு.

உலகமே உன்னை
 "தூற்றிக்" கொண்டிருக்க,
 இருகரம் கூப்பி நின்புகழை
 "போற்றிக்" துதிபாடி
 வரவேற்பது நானே நானாக 
 மட்டும்தான் இருக்கும்.

அறிவியலை கேட்டால் 
உன்னை "கிருமி" என்னும்.
அழகனை  கேட்டால்
உன்னை "கருமி" என்பேன்.
ஆம், பைசா செலவில்லாமல்
 பழக்க வழக்கம் 
பலவற்றை பக்குவமாய்
சொல்லித் தருகின்றாயே...

ஐந்து  அங்குல
இடைவெளியில் அடுக்கடுக்காய்
தொங்கும் கைப்பிடியை,
கைப்பிடிக்க கைகள் பத்து
போட்டி போட, 
தன் மூச்சு காற்றை
தானே சுவாசிக்கும், - இந்த
கான்கிரீட் காடுகள் வாழ்,
கார்ப்பரேட் பிரஜைகள்
 யாவும் தினம்தினம் 
ரயிலில் பயணிக்க,
யாருக்கும் சொல்லாமல்,
உன்னைப்போலவே
அனுதினமும் அனைவருக்கும் 
வந்துவிடும்  தும்மல் தனை,
எதிர்,புறம், மேல், கீழ் 
சுற்றம் முற்றம் என
என எத்திசையும் பாராமல்
எச்சிலை அள்ளித் 
தும்மித்  தொலைக்கும்
அறிவிலி ஜீவன்களுக்கு
கைக்குட்டை பயன்படுத்த
அழகாய் சொல்லித்தந்தாய்...


தலைசாயும் செங்கதிரை
தலையோடு கோதுவதாய்
தினந்தோறும் தான் எண்ணி
போகையிலும் வருகையிலும்
கிருமிகள் யாவும்
சகல சௌபாக்யத்தோடு 
குடித்தனம் நடத்தும் 
சுற்றுச்  சுவற்றை எல்லாம்
அனுபவித்து தடவி வந்து,
கை ஏதும் கழுவாமல்
நாயர் கடைதன்னில்
நாள்பட்ட எண்ணெயில்
தற்கொலை செய்துகொண்ட
பஜ்ஜியை எடுத்து தின்னும்
அருஞ் சுவை மன்னர்களை
சோப்புத் தண்ணீரில்
கைகழுவ செய்தாய்....!

திறந்து வைத்த நாள் முதல்
தண்ணீரை கூட
கண்டிராமல் காய்ந்திருக்கும்
அரசு மருத்துவமனைகளின்
 தரைகளை யாவும்
கிருமி நாசினி கொண்டு 
கழுவச் செய்து,
உன் சொந்த பந்தங்களான
ஏனைய வைரஸ்களை
பூவுலகம் அனுப்பி வைத்தாய்...!

காலச்சக்கரத்தின்,
ஆயுள் கைதிகளாய்,
அடைபட்டு கிடந்த
மண்ணுலக மனிதர்களுக்கு
21 நாட்கள் பெயில் 
கொடுக்கச் செய்து
ஞாயிற்றின் காலையும்
திங்களின் காலையும்
வேறுவேறு அல்லவென
உணர்த்திச் சென்றாய்...

வஞ்சம்  சூழ்ச்சி,
பொறாமை பொய்
போட்டி பேராசை
சண்டை சச்சரவு
சபலம் சுயநலம்
மதம் சாதி
குலம் கோத்திரம் 
உயர்ச்சி தாழ்ச்சி வென
ஆயிரம் கொரோனாக்களை
தன்னகத்தே கொண்டுள்ள
அற்ப மனிதனுக்கு 
"மனிதத்தின்" மகத்துவத்தை
அழகாய் புரியவைத்தாய்...!

ஒழுக்கத்தின் விழுப்பம் தனை
ஒழுங்காய் கற்றிடாமல்
வள்ளுவனின் வாக்குதனை
வகுப்போடு மறந்துவிட்டு 
வாட்ஸ் அப்பிலும் பேஸ்புக் கிலும்
வந்திந்திகளை பரப்பி வருகிறோம்
வீழாமல் என்றென்றும்
விழிப்புற மாட்டோம் என
கங்கணம் கட்டிக்கொண்ட
மானுட மாக்களுக்கு
நல்லுரை வழங்கிட 
வைரசாக வந்தவும்மை
வணங்காமல் இருந்திடுவோமா
இல்லை மறந்து தான் 
கடந்திடுவோமா..?

Wednesday, March 11, 2020

"குரு தட்சணை"

'அ' வென்றும் 'ஆ' வென்றும்
சிலேட்டில் எழுதி, சொல்லி
வந்த எமக்கு பத்தாம் வகுப்பு
வந்த பின்பு தான்
'அகரம்' என்றும் 'ஆகாரம்' என்றும்
சொல்லப் பழகித் தந்தாய்...!

ஆண் உயர்வா இல்லை
பெண் உயார்வா என்று
அறியா வயதில் புரியா
சண்டை செய்த எமக்கு
ஆணும் பெண்ணும்
சமம் என்று அறிவுரை செய்தாய்..!

அர்த்தம் புரியாமல்
மேல் கணக்கும், கீழ் கணக்கும்
மனப்பாடம் செய்த எமக்கு
சுதி, தாளம், இராகம் சேர்த்து
பாடலாக வடித்துத் தந்தாய்.

வகுப்பறைகள் தோறும்
பேசுவோரே கண்காணிக்க
இருவர் இருந்த நிலையில்
ஒழுக்கத்தின் மேன்மை
சொல்லி 'லீடர்' இல்லா
வகுப்பறையாக மாற்றி
புது புரட்சி செய்தாய்...!

கோனார் உரையில்
வினா விடை மட்டுமே
படித்து மதிப்பெண்
பெற தெரிந்த எமக்கு
நாபிறழ் பயிற்சியும்,
பொது அறிவு பக்கத்தையும்
படிக்கச் செய்தாய்...!

முதன் வகுப்பே
உன் வகுப்பாய்
தான் இருக்க,
பல சிந்தனையில்
பள்ளி வரும் எமக்கு
உன் நகைச்சுவையால்
செல்லக் கடி கடித்து
அத்தனையும் மறக்கச் செய்தாய்...!

'சார்' என்றும் 'மேடம்' என்றும்
ஆங்கிலத்தில் அழைத்தே
பழகிய எம் நாவிற்கு
'ஐயா' என்று அழகிய
தமிழில் அழைக்க
பழக்கம் செய்தாய்...!

டியூஷன் வகுப்பில்
ஒன்று, கதை பேசி
கழித்திருபோம் அல்லது
வீட்டுப் பாடம் எழுதி
முடித்திருப்போம் ஆனால்,
நீ வந்தே பின்னே
கவிதையும், பாட்டும் பாடசொல்லி
எங்கள் தனித்திறமை
யாவென எங்களை
அறியச் செய்தாய்...!

தூரத்தில் ஆசிரியர்
சென்றாலே ஒளிந்து
கொண்ட நாட்களை,
விடுமுறையில் கண்டாலும்
எதிர் சென்று வணக்கம்
செய்யும் நாட்களாய்
மாற்றிய "ஆசு அரியரும்"
நீ தானே...!

பிள்ளைகளுக்குள் பேதமின்றி
பொதுவாக நடத்தும் தாய்போல,
மாணவர்களுக்கு பேதமின்றி
அனைவரையும் ஒன்றுபோல,
அன்புவழி காட்டி
தோளில் கைபோட்டு
அரவணைத்துக் கொண்ட
அன்பாசிரியர் நீ தானே...!

கற்றவையும் கற்பவையும்
மட்டுமே சொல்லித் தர
இங்கே ஆயிரமாயிரம்
ஆசிரியர் இருக்க
"நிற்க அதற்கு தக"
என சொல்லிய ஆசிரியர்
நீ மட்டுமே  என
என்றும் பெருமை
கொள்வோம் நாங்கள்...!


(எந்தன் தமிழுக்கு விதை இட்டவர். ஆசிரியர் என்னும் புனித உறவை தாண்டி எங்களிடம் அன்பு காட்டிய ஆசான் திரு. பிரபு அவர்களின் பிறந்த நாளில் இந்த மாணவனின் சிறு கவி - தட்சணை)



Saturday, March 7, 2020

"தியாகம் போற்றுதும்"


ஓடும் நதி போல,
ஓங்கும் அலை போல,
நில்லாமல் கரை தொடும்,
நிகரில்லா பெண்ணினமே,
உந்தன் தியாகமதை 
எண்ணத்தான் கணக்குண்டோ?


மலர்ந்த வீட்டின் மனம்
மறந்து, மணந்த வீட்டின்
மனம் மலர, நினைவுகளை
கடந்து நிற்பதை தான் 
தியாகம் என சொல்லலாகுமோ?


வாக்கப்பட்டு வந்த வீட்டில் - புது
வழக்கமதை கற்றிட்டு
வாசல் கோலமிட்டு,
வந்தவருக்கு வணக்கமிட்டு,
வாய்க்கு சுவை உணவிட்டு,
வாரிசை தான் சுமந்து, நாளும்
வந்தனம் தான் செய்யும்
செயலதை தான்,
தியாகம் என சொல்லலாகுமோ?


மன்னவன் முன்செல்ல
அவன்தன் முதுகெலும்பாக 
பின்னவள் நீ செல்ல,
மணவாளனை,
வாழ்த்தும் ஊரதுதான்,
உன்னை மறந்ததை,
மறந்துவிடும் தன்மையதை
தியாகம் என சொல்லலாகுமோ?


செய்யும் வேலைதான்
அச்சாய் ஒத்திருக்க,
ஆணினம் என்பதனால்
ஊதியம் அதிகம் 
கொடுத்திடும் சமூகமதை
பொருத்திருக்கும் உன் செயலை,
தியாகம் என சொல்லலாகுமோ?


அதிகாரம் தான் காட்டி,
ஆதிக்கம் தான் செலுத்தி,
இழிவாய் தான் பேசி,
ஈதை தான் தந்து,
உற்றார் முன் இகழ்ந்து,
ஊரார் முன் ஏசி,
எட்டி தான் உதைத்து,
ஏளனம் தான்  பேசி,
ஐயுரவு தான் காட்டி,
ஒடுக்குமுறை தான் நீட்டி,
ஓரம் கட்டி இழிநிலை காட்டி,
ஔவியம் கொள்ளும் ஆணினத்தை,


அன்பால் தான் திருத்தி,
ஆதரவு தான் தந்து,
இன்முகம் தான் காட்டி,
ஈடில்லா தியாகம் தந்து,
உறவின் மகிமை காட்டி,
ஊன்றுகோலாய் துணை நின்று,
எண்ணத்தால் நிமிர்ந்து,
ஏற்றத்தாழ்வு   மறந்து,
ஐந்தொழிலும் ஒருசேர
ஒன்றாய் தான் செய்து,
ஓர்மை தான்  கொண்டு,
ஔடதமாகும் பெண்ணினமே,


வாழ்த்ததனை சொல்லிவிட்டால்
வணங்குவதாய் அர்த்தமில்லை,
அனுதினமும் தொழுதும்மை,
அடினெஞ்சில் போற்றிடுவேன்,
கழியும் வருடமதில் கடக்கும்
ஒரு நாள் பொழுது உமதல்ல,
ஆணினம் சுவாசிக்கும் 
ஒவ்வோர் நொடியும் உமதே.!

"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...