Saturday, December 21, 2019

வரவேற்புரை! (அண்ணன் திருமணம்)

பொதுவாக எனக்கு கடன் கேட்கும் பழக்கம் இல்லை. ஆனால், காலத்தின் கட்டாயம் இன்று கடன் கேட்கப்போகிறேன்... உங்கள் அனைவரிடமும்!?

ஆம், உங்கள் வாழ்வின் பொன்னான அடுத்த அரை மணி நேரத்தை எங்களுக்காய் ஒதுக்க வேண்டுகிறேன்.

 வருடத்தில் குறைந்தது  பத்து திருமண நிகழ்வுகளில் பங்கேற்று விடுவீர்கள். இதே சொந்தம் அங்கும் வரும். இதே பேச்சை அங்கும் பேசலாம். ஆனால், இத்திருமண தம்பதிக்கு வாழ்வில் இத்தருணம் மீண்டும் கிட்டவே கிட்டாது.

அனைவரும் வருகவென இரு வரியில் நான் முடித்தால், அந்த வரிகள் கூட என் மேல் வஞ்சனை கொள்ளும். ஆகவே, வார்த்தைகளை கோர்வையாக்கி, மணமக்களுக்கு "பூமாலை" போல, உங்களுக்கு ஒரு "பாமாலை" அணிவிக்கிறேன்!.

அதில் ஒரு சிறு - பூவை எடுத்து "சிரிப்போடு" அட்சதை தூவி "சிறப்போடு" வாழ்த்துங்கள் மணமக்களை...!

  •  உயிர் எழுத்தின் முதலெழுத்து, உயிர் கொடுக்கும் மூச்செழுத்து அவள் தான் "அம்மா".காலத்தின் ஓடத்தில் தன்னை படகாக்கி, என்னை பயணிக்க செய்பவளே உனக்கு என் முதல் வணக்கம்!

  • உந்தன் கண் வழியே உலகத்தை கண்டு கொண்டோம். இன்று உலகமே எங்கள் கண்முன்னே. இப்போது உந்தன் உலகத்தை நாங்கள் தேடுகிறோம். உந்தன் விரல் பட்டு செதுக்கிய சிற்பத்தில் ஒன்று, விழிதிறந்து உற்சவம் காணப் போகிறது. அன்பு தந்தையே உனக்கு என் தமிழ் வணக்கம்!

  • அவனாய் இருந்தவன், அவராய் மாறுகிறார் அண்ணியவள் வருகையால்!எந்தன் உலகத்தை எனக்கு முன்னே கண்ட உதிரம், அண்ணன். அவனது மூச்சுக்காற்றில் இன்றளவும் நான் சுவாசித்துக் கொண்டு இருக்கிறேன். அண்ணியவளுக்கு "உரியவன்" ஆனாலும் என்றைக்கும் எனக்கு "உயிரவன்" நீ. அன்பில் அண்ணனே உனக்கு என் அக வணக்கம்!

  • அவனும் அவளும் வந்து, அவனையும் இவனையும் பெற்று, அவனும் வளர்ந்து அவராகுகையில், அவனுக்கான அவளைத் தேடி, அவளை அவனுக்கு கொடுக்கையில் அவளுக்காக ஒரு கவிதையை இவன் வாசிக்கிறான். இனிமேல் என் வீட்டில் அண்ணனும், அப்பாவும், அம்மாவும் இரண்டாகிறார்கள். சம்பந்தி வீட்டார்க்கென் சம வணக்கம்!


உறவினர்கள் ஒவ்வோர்க்கும், ஒரு பக்கக் கவிதை பாடிட ஆசை தானெனக்கு.  கவி மகளுடன் நான் பேசத் தொடங்கினால், மணமகள் மருமகள் ஆயிட நேரம் ஆகிடும். ஆதலால் சுருக்கமாய் உறவுகள் ஒவ்வொன்றையும் ஓர் வரியில் விளிக்கிறேன்.


~ தன் தோளில் எமை சுமந்து உலகத்தை சுற்றி காட்டிய தாய்மாமனே.

~ எம்மை அன்பால் மூழ்கடித்து, உணவுப் பண்டங்கள் ஊடே உறவு பந்தத்தை ஊட்டி வளர்த்த அத்தைமார்களே.

~ தாயவள் தந்தையவன் நீட்சியாய், பிள்ளைகளிடம் பேதமின்றி எங்கள் விடுமுறையை விழாவாக்கிய சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மாக்களே.

~ அன்பின் வாசத்தை அம்மா அப்பாக்களை விட அதிகமாக காட்டிய ஐயா- அப்பத்தா, ஐயா- அம்மணிகளே.

~ ஒரு தாய் வயிற்றில் பிறக்காத போதிலும், ஒரே இரத்தமாக எம் கூட பயணிக்கும் அண்ணன், தம்பி, அத்தான், அத்தாச்சிகளே.

~ மண் கோட்டை கட்டி, சொப்பு சாமானில் உலை வைத்து ஊருக்கே உணவிட்டு, தன்னை ராணியாக்கி, அழகு பார்த்துக் கொள்ளும் அத்தை, மாமன் மகள்களே,

~ உறவு ஏதுமின்றி உதித்த பூக்கள்,உறவைவிட உறுதியாய் நாளும் மலர்ந்திடும் நறுமலர்களாக இங்கே பூத்திருக்கும் நட்பூக்களே,


உங்கள் அனைவருக்கும் இந்த அழகனின் அழகான வணக்கங்கள்.






"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...