Saturday, December 21, 2019

வரவேற்புரை! (அண்ணன் திருமணம்)

பொதுவாக எனக்கு கடன் கேட்கும் பழக்கம் இல்லை. ஆனால், காலத்தின் கட்டாயம் இன்று கடன் கேட்கப்போகிறேன்... உங்கள் அனைவரிடமும்!?

ஆம், உங்கள் வாழ்வின் பொன்னான அடுத்த அரை மணி நேரத்தை எங்களுக்காய் ஒதுக்க வேண்டுகிறேன்.

 வருடத்தில் குறைந்தது  பத்து திருமண நிகழ்வுகளில் பங்கேற்று விடுவீர்கள். இதே சொந்தம் அங்கும் வரும். இதே பேச்சை அங்கும் பேசலாம். ஆனால், இத்திருமண தம்பதிக்கு வாழ்வில் இத்தருணம் மீண்டும் கிட்டவே கிட்டாது.

அனைவரும் வருகவென இரு வரியில் நான் முடித்தால், அந்த வரிகள் கூட என் மேல் வஞ்சனை கொள்ளும். ஆகவே, வார்த்தைகளை கோர்வையாக்கி, மணமக்களுக்கு "பூமாலை" போல, உங்களுக்கு ஒரு "பாமாலை" அணிவிக்கிறேன்!.

அதில் ஒரு சிறு - பூவை எடுத்து "சிரிப்போடு" அட்சதை தூவி "சிறப்போடு" வாழ்த்துங்கள் மணமக்களை...!

  •  உயிர் எழுத்தின் முதலெழுத்து, உயிர் கொடுக்கும் மூச்செழுத்து அவள் தான் "அம்மா".காலத்தின் ஓடத்தில் தன்னை படகாக்கி, என்னை பயணிக்க செய்பவளே உனக்கு என் முதல் வணக்கம்!

  • உந்தன் கண் வழியே உலகத்தை கண்டு கொண்டோம். இன்று உலகமே எங்கள் கண்முன்னே. இப்போது உந்தன் உலகத்தை நாங்கள் தேடுகிறோம். உந்தன் விரல் பட்டு செதுக்கிய சிற்பத்தில் ஒன்று, விழிதிறந்து உற்சவம் காணப் போகிறது. அன்பு தந்தையே உனக்கு என் தமிழ் வணக்கம்!

  • அவனாய் இருந்தவன், அவராய் மாறுகிறார் அண்ணியவள் வருகையால்!எந்தன் உலகத்தை எனக்கு முன்னே கண்ட உதிரம், அண்ணன். அவனது மூச்சுக்காற்றில் இன்றளவும் நான் சுவாசித்துக் கொண்டு இருக்கிறேன். அண்ணியவளுக்கு "உரியவன்" ஆனாலும் என்றைக்கும் எனக்கு "உயிரவன்" நீ. அன்பில் அண்ணனே உனக்கு என் அக வணக்கம்!

  • அவனும் அவளும் வந்து, அவனையும் இவனையும் பெற்று, அவனும் வளர்ந்து அவராகுகையில், அவனுக்கான அவளைத் தேடி, அவளை அவனுக்கு கொடுக்கையில் அவளுக்காக ஒரு கவிதையை இவன் வாசிக்கிறான். இனிமேல் என் வீட்டில் அண்ணனும், அப்பாவும், அம்மாவும் இரண்டாகிறார்கள். சம்பந்தி வீட்டார்க்கென் சம வணக்கம்!


உறவினர்கள் ஒவ்வோர்க்கும், ஒரு பக்கக் கவிதை பாடிட ஆசை தானெனக்கு.  கவி மகளுடன் நான் பேசத் தொடங்கினால், மணமகள் மருமகள் ஆயிட நேரம் ஆகிடும். ஆதலால் சுருக்கமாய் உறவுகள் ஒவ்வொன்றையும் ஓர் வரியில் விளிக்கிறேன்.


~ தன் தோளில் எமை சுமந்து உலகத்தை சுற்றி காட்டிய தாய்மாமனே.

~ எம்மை அன்பால் மூழ்கடித்து, உணவுப் பண்டங்கள் ஊடே உறவு பந்தத்தை ஊட்டி வளர்த்த அத்தைமார்களே.

~ தாயவள் தந்தையவன் நீட்சியாய், பிள்ளைகளிடம் பேதமின்றி எங்கள் விடுமுறையை விழாவாக்கிய சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மாக்களே.

~ அன்பின் வாசத்தை அம்மா அப்பாக்களை விட அதிகமாக காட்டிய ஐயா- அப்பத்தா, ஐயா- அம்மணிகளே.

~ ஒரு தாய் வயிற்றில் பிறக்காத போதிலும், ஒரே இரத்தமாக எம் கூட பயணிக்கும் அண்ணன், தம்பி, அத்தான், அத்தாச்சிகளே.

~ மண் கோட்டை கட்டி, சொப்பு சாமானில் உலை வைத்து ஊருக்கே உணவிட்டு, தன்னை ராணியாக்கி, அழகு பார்த்துக் கொள்ளும் அத்தை, மாமன் மகள்களே,

~ உறவு ஏதுமின்றி உதித்த பூக்கள்,உறவைவிட உறுதியாய் நாளும் மலர்ந்திடும் நறுமலர்களாக இங்கே பூத்திருக்கும் நட்பூக்களே,


உங்கள் அனைவருக்கும் இந்த அழகனின் அழகான வணக்கங்கள்.






Saturday, November 30, 2019

"அன்பின் முகவரி"

இகல் வெல்லும் இழிச்சொல்லும்,
பகை வெல்லும் பழிச்சொல்லும்,
முன்செல்ல துதிபாடி,
பின்செல்ல சதிபாடி,
வஞ்சப் புகழ்ச்சியாய்
கெஞ்சிப் பிழைக்கும் பிழைப்பெதற்கு?

அதிகார திமிர் காட்டி,
ஆணவத்தின் முகம் காட்டி,
ஆளுக்கொரு வேசம் காட்டி,
அண்டி வந்தவரை,
அகம் மகிழ முகம் காட்டி,
அடினெஞ்சில் பகை காட்டி,
அடிமை கோலம் செய்ய,
அடிபணிய செய்வதேனோ?

வெஞ்சினிம் தீர்த்திட,
வென்சாமர கொடியெதற்கு?
ஆறாய் நெளிந்தோடும்
கண்ணீர்க்கு கடைமதகெதற்கு?
கசக்கி எறிந்த காகிதத்திற்கு
மரண தண்டனை தான்னெதற்கு?
கோவலனை கொன்றபின்
கண்ணகிக்கு கோயிலெதற்கு?

அறியா மானுடமே - பிறரை
மதியா மானுடனே,
கருவறை வாசலில் 
பிரசவித்த மறுநொடியே
அன்பின் கயிறான
தொப்புள் கொடிபோல
கத்தரிப்பது ஏனோ?

கலியுக மாணுடனே
காலத்தின் ஓடத்தில்
ஓடிக்கொண்டே இரு
நின்றுவிட்டால்...
நதி என்பார்கள்
குறைந்து விட்டால்...
குளம் என்பார்கள்
குனிந்து விட்டால்...
குட்டை என்பார்கள்
தேங்கி விட்டால்... 
சாக்கடை என்பார்கள்
நித்தம் பொழிவுரும்
நதியின் தூய்மையா?
நித்தம் கழிவுரும்
சாக்கடையின் நாற்றமா 
உன் முடிவை என்னது?

போனதுதான் போகட்டும்
போரது முடியட்டும்
போதையது தெளியட்டும்
ஆவேசம் குறையட்டும்
அன்பது புரியட்டும்..

உணர்ந்திடு மானிடா - இது
உனக்கே உனக்கான உலகம்,
அன்பு விசை கொண்டு
அகிலத்தை பார்,
உள்ளம் அழகாகும்.
காலச் சக்கரத்தை
அன்பு கொண்டு சுழற்றிடு,
ஒவ்வொரு அடியும் 
உன்னதமாக கடக்கும்.

அரபிக் கடலின்
அழகிய மீனாய்
அன்பு கடலில்
மூழ்கி முத்தெடு.
கடந்திட்ட காலம்தான்
கடலோடு போகட்டும்,
இனிவரும் காலம்தான்
இன்பமாய் கழியட்டும்...! 

Sunday, September 1, 2019

விடுமுறையில் விநாயகர்

காடு கரை ஏரி குளம் தான் படைத்தேன்,
கடைசியில் இவை காக்க,
மனிதவினம் தான் படைத்தேன்.
ஆடி வந்ததும் என்னை
தேடி வந்தது சூறை காற்று,
மறந்தும் கூட மறக்கவில்லை
மும்மாரி மழை கொடுக்க,
ஆஹா, அற்புதம் என்றேன்,
மனித மனம் மரகதம் என்றேன்,
காப்பதிலே என்னை மிஞ்சுவான் என்றேன்,
அளவுகடந்த ஆவலில்,
கோடை விடுமுறைக்கு,
விண்ணுலகில் விடுப்பு கேட்டு
மண்ணுலகம் தான் வந்தேன்,
உலகம் சுற்றினேன்,
என்னை மறந்தேன்,
எங்கும் பச்சை பசேல்,
செழிக்கும் காடு,
துடிக்கும் ஆறு,
மிடுக்கும் மலை,
சிலிர்க்கும் மழை,
துளிர்க்கும் செடி,
மடை மீதேறி நின்று
 ஏரிக்கரை தான் பார்த்தேன், 
 ஒருமுறையும் மறுக்காமல் மறுகால், பாய்ந்தது.
 படைத்த பொழுதை விட
 இப்பொழுது பூரித்து
 கிடந்தது பூமி,
 அகம் மகிழ்ந்தேன்,
 அற்புதம் என்றேன்.
 நீங்கா நினைவோடு
 விடைபெற்றேன்.
 விண்ணுலகம் தான் சென்று,
  மறுமுறை தான் வந்தேன்,
  வழி மாறி வந்தோமோ என்று
  விழி கசக்கி பார்த்தேன்,
  அதே இடம் தான்,
  அதே மக்கள் தான்,
  ஆனால்...
 கடந்த முறை கண்ட காட்சி
 கனவாகிப் போனதோ,
 மேற்கே சென்றேன்,
 பச்சை போர்வை போர்த்தி
 மண்ணுலக மனிதனுக்கும்,
 வின்னுலகத்திற்கும் சேர்த்து
 ஆக்சிஜன் தான் அனுப்பிய,
 அமாசான் காடு,
செக்கச் சிவப்பாய் 
தீந்தனல் கக்கியது,
அகதியாய் அ(டி)டைபட்டு கிடந்தது,
பிறப்பு முதல் இறப்பு வரை,
மனிதனை அனைத்தது மரம்,
பற்றி எரியும் போது கூட
அணைக்க மறந்து ஆண்ட்ராய்டு
ஆதிக்கத்தில் அடிமையாய் மனிதவினம்.
தலை கவிழ்ந்து தலை வைத்தேன்
தெற்குப் பக்கம்,
இயற்கையை கடவுளாய் வழிபட்ட
தமிழினம் கண்டிப்பாய் மாறாது
என்ற நம்பிக்கை தான் விடவில்லை.
கரடு முரடு பாதையிலே
கடந்து வர காலம் தான் கடந்து போனது
மூஞ்சூறுக்கும் மூச்சிறைத்து போனது.
வந்து சேர்ந்தேன்,
வாய் பிளந்தேன்,
என்னைப் போல் ஆயிரம் சிலைகள்,
ஊர்வலமாக நான் செல்ல,
என்னையே படைத்து
 ஊர்வலமாய் கொண்டு சென்றனர். 
 அடடா, என்று ஆச்சரியம் கொண்டு,
 அவர்களைத் தான் தொடர்ந்தேன்.
 வெட்ட வெளி மைதானம் கண்டேன்.
 மைதானம் நடுவே குழி ஒன்று,
 குழிக்குள்ளே தண்ணீர் நிரப்பும்
 சுமையுந்து இரண்டு,
 என்னடா கூத்தென்று 
 எண்ணி பார்த்ததால்,
 கரைக்க நீர் இன்றி
 கரையில் குழி வெட்டி
 குழிக்குள் கரைக்க போகிறார்களாம்.
 என்னடா கொடுமை என்று,
  மடை மீதேறி நின்று 
  ஏரிக்கரை தான் பார்த்தேன், 
  அப்போது தான் புரிந்தது, காக்க படைத்தது மனிதனை அல்ல மடையர்களை என்று...!

Sunday, August 4, 2019

"உரையும் - நடையும்"

பாவே,
பாரதியை,
"நிமிர்ந்த நடையும்,
நேர்கொண்ட பார்வையும்",
வேண்டும் பெண்டிற்கு   என்றாயே,
மெய்த்துப் பொய்தனவோ உன் வரிகள்
உன் சொல்லால் உயர்ந்து - இன்று
செல்லால் குனிந்த பெண்டிர் குலத்தை
காண தான் வாராயோ...!


அறிவே,
அவ்வையே,
"ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்" என
நல்வழி சொன்னாயே,
பாலாறும் தேனாறும்
பாய்ந்தோடிய பொன்னிலத்தில்
ஆற்று மணல் அல்ல
லாரிகள் ஓடுவதை கானத்தான் வாராயோ...!


வண்டமிழ் வேந்தனே,
வள்ளுவனே,
"மெய்ப்பொருள் காண்ப தறிவு"
என விழிச்சொல் கொடுத்தாயே,
கண்டனம் ஏதும் இன்றி
அங்கொன்றும் இங்கொன்றும்
கண்டதும் பகிர்வதை
காண தான் வாராயோ...!


இனியனே இளங்கோவடியே,
"அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாகும்" என
அருஞ்சொல் வீசினாயே,
அரசியலில் பிழைப்பதற்கு
அறமே எதிரியாகும்
என வாய்பாடு வகுத்து
வஞ்சகம் புரிவோரை
காண தான் வாராயோ...!


கவிசக்கரவர்த்தியே,
கம்பர் பெருமானே,
"பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும்,
பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?"
என பாடம் சொன்னாயே,
உன் பாட்டதும் மறந்து,
பின் பட்டதும் மறந்தும்,
வேண்டா சொல்லயே
வேதமாய் கொண்டலையும்,
மதிகெட்ட மனிதர்களை
காண வொருமுறை வாராயோ...!


மாணிக்கமே,
திரு வாசகனே,
"சொல்லிய பாட்டின்
பொருள் உணர்ந்து"
என கற்றல் வழி சொன்னாயே,
கற்றல் மொழி மறந்து
கத்தல் மொழியை
வழியாக்கி பின் வலியாக்கிய எம்மை
காண வொருமுறை வாராயோ...!


கற்கும் கல்வியதை
மதிப்பெண் தரும்
பாரமாய் பாராமல்
மதிப்பளிக்கும் மதியுமாய்
பொருளளிக்கும் பொண்ணுமாய்
"கற்றபின் நிற்க அதற்கு தகவென"
வள்ளுவன் வழி நடந்திடுவோம்...!








Thursday, March 7, 2019

பெண்மை போற்றுதும்...!

"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்,
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்,
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!"

நிமிர்ந்த பார்வையும் நேர் கொண்ட நடையும் வேண்டும், என்ற புரட்சிக் கவிஞன் பாரதியின் வரிகள் இவை. பாரதியாரின் இவ்வரிகள் உண்மையாகவே நிகழ்த்த பட்டிருக்கின்றதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.பெண் சுதந்திரம் என்று எல்லோருமே பதிவிட்டாலும், பேசினாலும் அதை நடைமுறையில் இன்னும் முழுமையாக பெண்களுக்கு கிடைக்கவில்லை என்பதே வருந்தத்தக்க உண்மை. ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் மகளிர் தினத்தன்று அனைவரும் தங்களுடைய தாய்,தோழி,தமக்கை மற்றும் உறவு பெண்மணிகளின் படங்களை பதிவிட்டு மகளிர் தின வாழ்த்துக்களை கூறுகிறோமே தவிர உண்மையில் அவர்களுக்கான சுதந்திரத்தையும் அவர்களுக்கான தனித்துவமான இடத்தையும் விட்டுக் கொடுத்தோமா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏன் வந்தது இந்த பெண்கள் தின கொண்டாட்டம், ஒவ்வொரு தினமும் பெண்கள் தினமாய் ஆகிட என்ன செய்திட வேண்டும் என்பதனை இங்கே காண்போம்.

பெண்கள் தின வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும் என்றால் நாம் நூறு ஆண்டுகளுக்கு முன் செல்ல வேண்டும்.

• 1850 களில் அமெரிக்க மாகாணத்தில் துணிகள் உற்பத்தி செய்யும் தொழிலே பெரும்பான்மையான மக்களால் செய்யப்பட்டது. ஆனால் அவ்வாறான வேளைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உணவு,சம்பளம், வேலை நேரம் போன்றவற்றில் பெரிதும் பாகுபாடு காட்டப்பட்டது.ஆண்கள் எட்டு மணி நேரம் வேலை செய்தனர் என்றால் பெண்கள் 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வேலை செய்ய நிர்பந்திக்க பட்டனர்.மேலும் வேலைக்கேற்ற ஊதியமும் அவர்களுக்கு நிராகரிக்க பட்டது. தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக பெண்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இது பெண்கள் தங்கள் சுதந்திரத்தை காக்க எடுத்த வைத்த முதல் அடி எனலாம்.

• அதன் பிறகு, தெரசா மாலிகெல் என்பவரின் ஆலோசனைப்படி
பெண்கள் தினம் முதன் முதலில் 1909 ஆம் ஆண்டு அமெரிக்காவில் "தேசிய பெண்கள் தினமாக" அமெரிக்க பொதுவுடமை கட்சியால் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு உலகம் முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

• 1910 இல்  டென்மார்க் நகரில் "சர்வதேச பொதுவுடமை பெண்கள் மாநாடு" நடைபெற்றது. 17 நாடுகளை சேர்ந்த 100 பெண்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

• அதற்கு அடுத்த வருடம், அதாவது 1911 இல் ஆஸ்திரியா,டென்மார்க், ஜெர்மனி போன்ற நாடுகளில் லட்ச கணக்கான பெண்களால் ஒன்றாக இணைந்து பெரு விமர்சையாக கொண்டாட பட்டது.

• 1975 இல் ஐக்கிய நாடுகள் சபையில் பெண்கள் தினம் முதல் முறையாக கொண்டாடப்பட்டது.

• 1977 இல் ஐக்கிய நாடுகள் சபையில் பெண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் எட்டாம் தேதி கொண்டாட படும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

• அதன் பின் 1996 முதல் ஒவ்வொரு வருட பெண்கள் தினமும் ஒவ்வொரு கருத்தை மையமாக கொண்டு கொண்டாட பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பெண்கள் தினம் " ஊரக மற்றும் நகர்புற பெண்களின் வாழ்வியலை மாற்ற இதுவே நேரம்" என்னும் கருத்தியலை கொண்டு கொண்டாட பட்டது. இந்த ஆண்டிற்கான கருத்தாக "சமாமாக நினைத்திடு, புத்திசாலியாக வளர்ந்திடு, மாற்றத்திற்கு முனைந்திடு" என்னும் கருத்தியலை கொண்டு கொண்டாட பட உள்ளது.

"மாற்றம் என்பது சொல் அல்ல செயல்"

வெறும் மாற்றம் மாற்றம் என்றால் அது என்பது எந்நாளும் வராது. ஒரு கனவாகவே கடந்து விடும். நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த பெண்கள் வாழ்விற்கும், இப்போது பெண்கள் வாழும் வாழ்க்கை முறைக்கும் அளப்பரிய வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதனை யாரும் மறுத்து கூற முடியாது. ஆனாலும் பெண்கள் விரும்பும் வாழ்க்கை அவர்களுக்கு கொடுக்கப்படுவது இல்லை.  எத்தனையோ ஆண்டுகள் போராட்டதிற்கு பின்பு பெண்கள் அடுக்களையில் இருந்து தங்களுக்கான விடுதலையை பெற்று விட்டனர். இந்தக் கால கட்டத்தில் பெண்கள் நுழையாத துறையே இல்லை எனலாம். ஆட்டோ ஓட்டுனர் முதல் விமானம் ஒட்டும் வரை, தொழில் நிர்வாகம் முதல் ஒவ்வொரு துறையிலும் கால் பதித்ததோடு மட்டும் அல்லாமல், தத்தம் துறையில் மிகப்பெரிய வெற்றியும் பெற்று சாதித்து காட்டி உள்ளனர். "அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு" என ஏளனப் பேச்சு பேசியோர் மத்தியில், நம்மாலும் சாதிக்க முடியும் என்ற வெற்றி வேட்கை கொண்டு போராடி அதில் வெற்றியும் கண்டுள்ளனர் நம் பெண்டிர். உதாரணமாக  இந்தியாவின் முன்னணி குளிர்பான நிறுவனம் பெப்சி. இந்த நிறுவனத்தின் உயரிய பொறுப்பான தலைமை நிர்வாக அலுவலராக பணியாற்றி பெருமை சேர்த்தார் இந்திரா நூயி என்னும் பெண்மணி. அதே போல் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் உயரிய பொறுப்பில் இருந்து தங்களுக்கான ஆளுமையை நிரூபித்து காட்டினர். நிர்வாக துறை ஒரு புறம் என்றால், விளையாட்டில் ஒலிம்பிக் அளவிற்கு சென்று நாட்டிற்கே பெருமை சேர்த்துத் தந்துள்ளனர் நம் பெண்கள். 2012 ஒலிம்பிக் போட்டிகள் பாட்மின்டன் போட்டியில் வெண்கலம் வென்று வரலாறு படைத்தார் செய்னா நேவால். அதற்கு அடுத்த ஒலிம்பிக்கில் அதாவது 2016 ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று இந்திய விளையாட்டை உலக அளவிற்கு கொண்டு சென்றவர்.  இவர்களை போன்ற பதக்க மங்கையரை பார்த்து உந்துதல் கொண்டு எத்தனையோ சின்னஞ் சிறிய பெண் குழந்தைகள் பயிற்சிக்கு செல்கின்றனர்.இப்படி எந்த துறையில் இருந்தாலும் அந்தத் துறையில் உச்சம் தொட முனைப்பு கொண்டு போராடி வருகின்றனர் நம் பெண்கள். அப்படி இருக்கையில், அவர்களுக்கு எதிரான குற்றங்களை குறைந்த பாடில்லை.  எண்பது வயது முதியவளும், 8 வயது ஆசிபாக்களும் இன்னமும் இங்கே சூறையாட பட்டுக்கொண்டு இருக்கின்றனர். பள்ளி, கல்லூரி,அலுவலகம், பூங்கா என எங்கு சென்றாலும் அவர்கள் ஒருவித பய உணர்வோடே சென்று வருகின்றனர். தனியாக செல்லுமிடத்தில் எதிரே ஆண் வந்தால் அவர்களுக்கு ஒருவித பய உணர்வு தொற்றிக் கொள்கிறது. இங்கே இந்த ஆணால் தமக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற மனநிலைக்கு பெண்கள் தள்ள படுகிறார்கள். பெற்ற மகளேயே வன்புணர்வு செய்யும் கொடுமைகள் இன்னும் இங்கே அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன என்பது அவலமான உண்மை. சக பெண்ணை பார்க்கும் போது, தங்கை,தாய் உணர்வு தோன்றும் காலம் எப்போது வரும். தானும்  ஒரு பெண்ணால் இந்த உலகிற்கு அறிமுகம் செய்யப் பட்டோம் என்பதனை எப்போது உணர்வர். தானாய் எல்லாம் மாறி விடும் என்று நம்பி இருப்பது முட்டால் தனம். சிறுவயது முதலே சிறுவர்களுக்கு ஆணும் பெண்ணும் சமம் என்பது போன்ற கருத்துக்களை ஊட்டி வளர்க்க வேண்டும். அதற்கடுத்து, திரை படங்களில் காட்டப்படும் பள்ளிப் பருவ, கல்லூரி பருவ காதல் காட்சிகளை அறவே ஒழிக்க வேண்டும். அந்த வயதில் வருவன யாவும் வெறும் இனக் கவர்ச்சியே என்பதனை புரிய வைத்தல் வேண்டும். இவ்வாறான கருத்துக்கள் அவர்கள் மனதில் ஆழ பதிந்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒரு போதும் நடக்கவே நடக்காது. "பெண்களை போற்றாத எந்த ஒரு தேசமும் உயராது". பத்தோடு பதினொன்றாக இதையும் ஒரு கட்டுரையாக படித்து விட்டு கடந்து விடாமல், நம்மால் முடிந்த மாற்றத்தை புகுத்த முயற்சிப்போம். ஆணாதிக்க சமூகம் இல்லாத, ஆணும் பெண்ணும் சரிக்கு சமமான உரிமை உள்ள நாடாக மாற்ற உழைத்திடுவோம். ஒவ்வொரு தினத்தையும் பெண்கள் தினமாக கொண்டாடிடுவோம்.

"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...